16.12.11


எங்கள் இனக்குழு

இந்தநாடு முழுக்க

பரவியிருந்தது


பெண்களை பூசித்தோம்

அறிவையே செல்வமாய்க் கருதினோம்

மன்னனை மக்களின் அடிமை என்றோம்

விலங்குகளை நண்பர்களாக்கினோம்

உதவுகிறவனை உயர்வாய் எண்ணினோம்


யாரோ எதுவோ துரத்தியிருக்க

எங்கிருந்தோ மூச்சிரைக்க ஓடிவந்தது

ஒரு புதிய இனக்குழு

முதலில் இருக்கவும் பிறகு

படுக்கவும் இடம் கொடுத்தோம்


அவர்கள் எங்களைப் போலில்லை

தோல் வெளுப்பாய் இருந்தார்கள்

 புதிய மொழி பேசினார்கள்

 ஓடிவரும்போதே தங்கள்

கடவுளையும் கூட்டி வந்தார்கள்


அவர்களின் கடவுளைக்காட்டிப்

பயமுறுத்தினர்

அவர்களின் கடவுள் அற்புதங்களை

நிகழ்த்துமெனச் சொன்னார்கள்

அவர்களின் மொழியும் கடவுளும்

எங்களைப் பயமுறுத்தின


தங்கள் கடவுளை வணங்கச் சொன்னார்கள்

வணங்கினோம்

அவர்களின் மொழிகொண்டு

கடவுளிடம் பேசுவதாய் சொன்னார்கள்

நம்பினோம்

கடவுளுடன் அவர்கள் பேச

எங்களிடம் கூலி கேட்டார்கள்

கொடுத்தோம்.


எங்கள் நிலங்களை

அபகரித்து துரத்தியடித்தார்கள்

ஓடிவந்தோம்

நாங்கள் எதிர்க்கவில்லை

அவர்களை எதிர்க்க எங்களிடம்

கடவுள் எவருமில்லை


எதற்கோ ஆசைப்பட்டு

எங்கள் இனக்குழு சாம்ராஜ்யங்களை

இழந்ததாய்ச் சொன்னார்கள்

வரலாற்றை ஆராய்ந்தவர்கள்
எதற்கு ஆசைப்பட்டோம் என்பதை

அவர்களால் சொல்ல முடியவில்லை

எங்களுக்கும் தெரியவில்லை.

கடவுள் இல்லையென்று சொல்லித்திரிந்த

கருப்புச்சட்டைக்காரனொருவன் 

கனவில் ஏதோ காட்சி தந்ததென
கருப்புச்சட்டை வேட்டியோடு புதிதாக

மாலையும் போட்டுக்கொண்டான்.


'நேத்து வரைக்கும் நல்லாத்தேன்' இருந்த

கொமரேசன் மவன் சேகரை

காந்தக்கண் பெண்ணொருத்தி கழுத்தறுத்தாளாம்

ஆடைகளைக் கிழித்துக்கொண்டு
அழுக்குடலோடு சாலைகளில் திரிகிறான்.





15.12.11




என் வாழ்வைப் போலவே 

ஓடிக்கொண்டிருக்கிறது 

நான் பார்க்க நேரிடும் நதி.


22.11.11





மனிதர்கள்

இல்லாத ஊரில்


குடியிருப்பதில்லை


கடவுள்.




உன்னைப்பற்றிய 

நினைவுகளுக்கு


உன் அனுமதி


தேவையில்லை என்பது


எத்தனை வசதியாயிருக்கிறது.....




அச்சிலேற்ற

தகுதியற்றதாய்


திருப்பி அனுப்பப்படுகிற 


கவிதைகள் அனைத்தும்

 
உன்னையும் என்னையும்


பற்றியதாய் இருக்கின்றன.




என்னைக் கடந்து

செல்கிறார்கள் சிலர்.



சிலரைக் கடந்
து 


செல்கிறேன் நான்.





இதழ்கள் பிரித்து 

பேசத் தொடங்குகிறது


முத்தம்.



காதலாகிறது


காமம்


காமமாகிறது


காதல்.




இவன் சிரிக்கிறான்

இவன் ரசிக்கிறான்


இவன் காதலிக்கிறான்


இவன் ஏமாறுகிறான்


இவன் கோபம் கொள்கிறான்


இவன் கவிதை எழுதுகிறான்



இவன் இவனை வேடிக்கை 


பார்க்கத் தொடங்குகிறான்.



பின்னொருநாள் இவன் இவனை


உணர்ந்துவிட்டதாய் இவனிடமே 


சொல்லிக்கொள்கிறான்.




தூண்டிலிட்டு மீன்பிடிக்கச் செய்யப்படும்

பிரயத்தனங்கள் அசாதாரனமானவை



ஆசைப்படும் மீனின் அளவுக்கேற்ப


நரம்பும் முள்ளும் இருப்பதும் அவசியம்

 

சின்ன மீனென்றால் புழுவையோ


பெரிய மீனென்றால் சின்ன மீனையோ


லாவகமாய் முள்ளில் செருகத்


தெரிந்திருக்க வேண்டும்



அசையும் தக்கையைக் கொண்டே


அது என்ன மீன் என்பதைச்

 
சொல்லிவிடும் திறனும் அவசியம்



ஒவ்வொரு மீனும் ஒவ்வொரு மாதிரி


என்பது முக்கியமான தூண்டில் கோட்பாடு



மெதுவாக இழுப்பது வேகமாக இழுப்பது


சுண்டி இழுப்பது சுருக்கி இழுப்பது 


என்பவைகளையும் கற்றிருத்தல் நலம்



சிதைவுறாமல் முள்ளிலிருந்து


விடுவிப்பது எப்படி என்பதை


பார்த்துப் பழகுவதே சிறப்பு



பிடித்த மீன்களை மீண்டும்


நீரிலேயே விட்டுவிடுவதோ

 
சமைக்க வீட்டுக்கு எடுத்துச் செல்வதோ


அல்லது நண்பர்களிடம் கொடுத்துவிடுவதோ


உங்கள் விருப்பம் அதிலொன்றும்


கட்டுப்பாடுகள் இல்லை



இவற்றையெல்லாம் விட


முக்கியமானது நீங்க
ள் 


மீன்கள் சுவாசிப்பது பற்றியும்

அவைகள் நீந்துவது பற்றியும்

 
யோசிக்காதவராய் இருக்க வேண்டும்.







நேற்றிரவு 

தூக்கிட்டுக் கொண்டேன்.



மரணத்துக்குப் பிறகும்


வாழ்வு


எப்போதும்போல்தான்


இருக்கிறது.

கனவென்று


உணர்ந்ததைத் தவிர.


நேற்று நல்லவன்

இன்று கெட்டவன்

நாளை மீண்டும்

நல்லவனாகிவிடுவேன்.


8.11.11



கடைசியாக 

சில முத்தங்களைத் 
தந்தாள்


பழைய முத்தங்களைப்
போலில்லை அவை.

3.11.11

ஒரு பயணம் ஒத்திவைக்கப்படுகிறது
ஒரு வாக்குறுதி ஏமாற்றப்படுகிறது
ஒரு காதல் மறுக்கப்படுகிறது
ஒரு தற்கொலை தடுக்கப்படுகிறது
ஒரு செய்தி மறைக்கப்படுகிறது.


கடந்துவிட்ட
எல்லா கணங்களிலும்
 

வேறொரு சம்பவம்
நிகழ்ந்து விடுகிறது.






ஒரு பொய்யை வெளியிடுகிறேன்.

அது இன்னொரு பொய்யாக
அவநம்பிக்கையாக
துரோகமாக
தீராப்பகையாக

வன்முறையாக

என்னிடம் திருப்பித் தரப்படுகிறது.


இனி

இந்தப்பொய்களைக் கைவிடலாம்.

அல்லது

அன்பைத் தருகிற

ஒரு பொய்யைத் தேடிப்பார்க்கலாம்.


2.11.11


தேவதைகளைக் காதலிப்பவர்கள்

தேவகுமாரர்களாய்

இருப்பதில்லை.


கடைசியில் 

மழையிடம்


எனது காதலைச் சொல்லிவிட்டேன்.


அது 


இன்னும் அழகாய்ப்

பெய்துகொண்டிருக்கிறது.







வெயிலோடு கோபித்துக் கொள்வதைப்போல
மழையோடு கோபிக்க முடிவதில்லை.


கோபமென்றாலும் அது செல்லக் கோபம் தான்.

29.10.11


வானமெங்கும்
பறந்து திரிய 
போதிய பலமில்லாதவை 
எனது இறக்கைகள்
என்பதை உணர்ந்திருந்தேன்.


பறக்க வேண்டும்
சுதந்திரமாய் பறக்க வேண்டும்
பலத்துடன் பறக்க வேண்டும்.
முடிவெடுத்தேன்

உயரத்துக்கும்
அகலத்துக்கும்
அளவுகள் வகுத்தேன்.

பறக்க முடிந்த 
தூரத்தை 
எல்லைகளாக்கினேன்.

என்னுடைய 
வானத்தை 
நானே உருவாக்கினேன்.

என் வானத்தினுள்
என்னைப் போலவே 
எவரும் பிரவேசிக்கலாம்.
எல்லைக்கோடுகளையும்
வரைந்து கொள்ளலாம்.

ஆனாலும் இது என் வானம்.
நானொரு சுதந்திரப் பறவை.






7.9.11


உயிரை விட்டுப் 
பிரிந்து செல்வதென்பது
இத்தனை இலகுவாயிருக்கும் 
என்பதை இதற்குமுன்பு 
நான் அறிந்திருக்கவில்லை.

எத்தனையோ முறை 
முயற்சித்திருக்கிறேன்.
அத்தனை முறையும் 
என் நோக்கம் செத்துப் போவதல்ல.
'நான் சாகத் துணிந்தவன்' 
அல்லது 
'உயிர் வாழ்தலில் ப்ரியமில்லாதவன்' 
என்பதை 
எல்லோருக்கும் உணர்த்தவே.
குறிப்பாக என் தோழிகளுக்கு.


ஒருமுறை 
எறும்புகளைச் சாகடிக்கும் 
மருந்தை குறைந்த அளவில் 
இனிப்பான குளிர்பானத்தில் 
கலந்து குடித்தேன்.


மழுங்கிப் போன பிளேடால் 
கை நரம்புகளில் பட்டிடாதவாறு 
அறுத்துக் கொண்டிருக்கிறேன்.


ஆட்கள் சூழ்ந்திருந்த 
தருணத்தில் 
தூக்கிட்டுக் கொள்ள
முயற்சித்தேன் ஒருமுறை.


மண்ணெண்ணெய் வாங்கத்
தெரிந்தவனுக்கு 
ஒரு தீப்பெட்டி வாங்கத் தெரியாதா?
தேவைக்கதிகமாகவே
ஊற்றிக்கொண்டு
எல்லோரிடமும் 
தீப்பெட்டி கேட்டிருக்கிறேன்.


ஒவ்வொரு முறை 
முயற்சிகளுக்கு முன்பும் 
நான் சாகும் முயற்சியில் 
இருக்கிறேன் என்பதற்கான 
அறிகுறிகளை என் நண்பர்களுக்கு 
உணர்த்திவிட மறப்பதில்லை.



இன்று காலை,
இதுவரை எதிர்பார்த்தேயிராத
ஒரு சம்பவம் நிகழ்ந்தது.
மெதுவாகச் ஓட்டிச்சென்ற 
என் இருசக்கர வாகனத்தின் மீது
சரக்குந்து ஒன்று
போகிற போக்கில்
இடித்துத்தள்ளி விட்டு
சென்றுவிட்டது.



கடைசிக்கணத்தில்,
'வாழ்ந்துவிடும் ஆசை'யை
என் மூளைக்குச்
சொல்லிக் கொண்டிருந்தது
இன்னும் நினைவிலிருக்கிறது.

இறப்பைக்குறித்து
நான் கணித்திருந்திருந்த
அத்தனையும்
தப்பாகிப்போனதை
இப்போது உணர்கிறேன்.
நான் யோசித்திருந்த 
எதுவுமே உண்மையில்லை.
நீங்கள் யோசிப்பதும் 
அப்படியே இருக்கலாம்.

உயிரை விட்டுப் 
பிரிந்து செல்வதென்பது
இத்தனை இலகுவாயிருக்கும் 
என்பதை இதற்குமுன்பு 
நான் அறிந்திருக்கவில்லை.



2.8.11

தமிழனின் கணிதம்.



ஐரோப்பிய கணித மேதைகள், "பித்தகோரஸ் தேற்றத்'தை, 


விளக்குவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்,

அதாவது, 6வது நூற்றாண்டிலேயே புதையனார் என்ற தமிழர் 



செங்கோன முக்கோணத்தில்

கர்ணத்தின் அளவைக் கண்டுபிடிக்கும் எளிய வழியைக் கண்டறிந்தார்.

அவர் எழுதிய கணிதப் பாடல்.

"ஓடிய நீளந்தன்னை

ஓரெட்ட்டுக் கூறதாக்கி

கூறிலே ஒன்று தள்ளி

குன்றத்தில் பாதி சேர்த்தால்

வருவது கர்ணம்தானே".

**************************************

அதாவது பிதாகரஸ் தேற்றம்:

A² + B² = C²

3^2 + 4^2 = 5^2

9 + 16 = 25

25 = 25

C=5

**************************​

இனி, புதையனாரின் சூத்திரம்:


ஓடிய நீளந்தன்னை - கொடுக்கப்பட்டிருக்கும் இரண்டு அளவுகளில் 



பெரிய அளவை,

ஓரெட்ட்டுக் கூறதாக்கி - எட்டு பாகங்களாக்கி,

கூறிலே ஒன்று தள்ளி- அதிலிருந்து ஒரு பாகத்தைக் கழித்து,

( பெரிய அளவான 4 ஐ எட்டு பாகங்களாக்கி, /அதிலிருந்து 



ஒரு பாகத்தைக் கழித்தால் வருவது மூன்றரை.

குன்றத்தில் பாதி சேர்த்தால் வருவது கர்ணம்தானே.- 



குன்றம் என்பது கொடுக்கப்பட்டிருக்கும் மற்றொரு அளவு.

மற்றொரு அளவு மூன்றில் பாதி ஒன்றரை.

இதனுடன் ஏற்கனவே கணக்கிடப்பட்டு மீந்த 



அளவான மூன்றரையையும் சேர்த்தால் கிடைப்பது ஐந்து.

C=5



27.6.11


கொண்டாட்டங்களின் தேவதை அவள்.

என்னைப் பார்த்துக் கண் சிமிட்டியபடி

சிரித்துக் கொண்டிருந்தாள்.

"கொண்டாடத் தெரியாதவன் என்பதால்

எள்ளி நகைக்கிறாயா" எனக் கேட்டேன் 

"இல்லை, நான்தான்

கொண்டாட்டங்களின் தேவதை என

நம்பிக் கொண்டிருக்கிறாயே 

அதை எண்ணி நகைக்கிறேன்" என்றாள்.   




10.5.11

பொய்கள்

சொல்லிவிட்ட பிறகும்

வேறுமாதிரியாக

சொல்லியிருக்கலாம்

என்றே எண்ணத் தோன்றுகிறது

எல்லாப் பொய்களும்...